ஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பரிதாபமாக உயிரிழந்தன.
ஆஸ்திரேலியாவில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னி நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் வீசிய அனல் காற்றில் நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலியாகின. அன்று சிட்னி நகரில் உள்ள பெனிரத் பகுதியில் 47.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. 1939-ம் ஆண்டிலிருந்து பதிவான வெப்பநிலையில் இதுதான் அதிகப்பட்சமாகும்.
இந்த அனல் காற்றால் வௌவால்கள் மூளை கருகி இருக்கும். இதனால் வௌவால்கள் இறந்து கீழே விழுந்ததாக வௌவால்கள் பாதுகாப்பு ஆணையத்தின் மேலாளர் கூறினார். வௌவால்களை காப்பாற்ற பலர் முயன்றனர். ஆனால் அவர்களால் சிலவற்றை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. இதுவரை இத்தகைய அனல் காற்று ஏற்பட்டது கிடையாது.
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்த பெரிய வௌவால்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த அனல் காற்றினால் இறந்த வௌவால்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பல பறவைகள் மற்றும் விலங்குகள் இந்த அனல் காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது.