இலங்கையர்களுக்கு கனடா ஆசை காட்டி கோடிகளை கொள்ளையடித்த நபர் தப்பியோட்டம்

முன்னாள் தொழில் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஆறு கோடி ரூபா நிதி மோசடி செய்த நபர் ஒருவருக்கு உதவியதாக முன்னாள் தொழில் அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.< முன்னாள் தொழில் அமைச்சரின் உதவியுடன் நிதி மோசடியில் ஈடுபட்ட குறித்த நபர் தற்பொழுது கனடாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். இந்த நபரை கைது செய்வதற்கு கனேடிய பொலிஸாரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. இந்திக்க ஜயசூரிய எனப்படும் இந்த நபரிடம் வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்து கொள்ள குறித்த நபரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு புலனாய்வுப் பிரிவினர், கனேடிய பொலிஸாரிடம் அதிகாரபூர்வமாக கோரியுள்ளனர். கனடாவிற்கு ஆட்களை அனுப்பி வைப்பதாகத் தெரிவித்து ஒரு நபரிடம் தலா எட்டு லட்சம் ரூபா என்ற அடிப்படையில் குறித்த நபர் பணம் பெற்றுக்கொண்டுள்ளார் மக்களிடம் பெற்றுக்கொண்ட பணத்தையும் எடுத்துக் கொண்டு குறித்த நபர் கனடாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். சந்தேக நபரை கைது செய்வதற்கு ராஜதந்திர ரீதியிலான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கனடாவிற்கு ஆட்களை அனுப்பி வைப்பது தொடர்பில் குறித்த சந்தேகநபர் நடத்திய தெளிவுபடுத்தல் கூட்டங்களில் அப்போதைய தொழில் அமைச்சர் பங்கேற்றிருந்தார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அரசாங்கத்தின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்பதனை காண்பிக்கும் நோக்கில் குறித்த நபர் தொழில் அமைச்சரையும் இந்த தெளிவுபடுத்தல் கூட்டங்களில் இணைத்துக் கொண்டுள்ளார். விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் தொழில் அமைச்சரும் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.