“ஊழல், மோசடிகளில் ஈடுபடும் சகலருக்கும் அரசியல் கட்சி, பதவி பேதமின்றி உயர்ந்தபட்ச தண்டனை”

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு அரச சொத்துக்களுக்கும் உடமைகளுக்கும் இழப்பினை ஏற்படுத்தும் சகலருக்கும் அரசியல் கட்சி, பதவி வேறுபாடுகளின்றி உயர்ந்தபட்ச தண்டனை வழங்குவதற்கான பின்னணி உருவாக்கப்படும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பொலன்னறுவை, தியசென்புர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் நோக்குடன் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெறும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் தவறிழைப்பதற்கு தான் வாய்ப்பளிக்கப்போதில்லை என்று தெரிவித்தார்.
தவறிழைக்கும் அனைவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு உயர்ந்தபட்ச தண்டனையை வழங்க கட்சியின் தலைவர் என்றவகையில் தயக்கமின்றி செயற்படவுள்ளதாக வலியுறுத்திய ஜனாதிபதி , ஊழல், மோசடிகளின்றி மக்களை நேசிக்கும் உண்மையான மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க உறுதியுடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை அவ்வண்ணமே நிறைவேற்றுவதற்கான தீர்மானங்களை மேற்கொள்ளும் வகையில் கடந்த மூன்று வருடங்களாக செயற்பட்டதுடன், விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து, அவர்களது தேவைகளை நிறைவேற்றி வைக்க முடிந்தமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
2012 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட வடமத்திய மாகாண மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்குவதாக அப்போதைய அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியபோதும் தேர்தலின் பின்னர் அம்மக்களுக்காக எந்தவொரு உதவியையும் வழங்கவில்லை என்பதையும் ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்தார்.
வரட்சி நிலைமைகளை எதிர்நோக்கும் வகையில் தமது விவசாய நடவடிக்கைகளை திட்டமிட்டுக் கொள்வதற்கான வழிகாட்டல்களை விவசாயிகளுக்கு வழங்கி பெரும்போகம் சிறுபோகம் தொடர்பான புதிய பயிர்ச்செய்கை செயற்திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படும் சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலை, இரத்தினபுரி பிரதேசங்களிலிருந்து கடலுடன் கலக்கும் அளவில்லாத நீரை வடக்கிற்கும் வடமத்திய மாகாணத்திற்கும் குழாய் மூலமாக கொண்டு செல்வதற்கான செயற்திட்டமும் உருவாக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்ன உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.