சசிகலாவிடம் 4500 கோடி கணக்கில் காட்டாத வருவாய்? பகீர் கிளப்பும் வருமானவரித் துறை

சசிகலா மற்றும் அவரது உறவினர்களிடம் 4500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் கணக்கில் வராமல் இருப்பதாக வருமானவரித் துறை மூலம் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் எம்.எல்.ஏ உள்ளிட்டோருக்கு சொந்தமான மற்றும் உறவினர்களின் அலுவலகம் மற்றும் வீடுகள் என 187 இடங்களில் வருமானவரித் துறை சமீபத்தில் திடீர் சோதனை நடத்தியிருந்தது.
அதுமட்டுமல்லாது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்திலும் ஜெயலலிதா அறை மற்றும் அவரது உதவியாளர் பூங்குன்றன் அறையிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 80 போலி நிறுவனங்கள் நடத்தி வந்ததற்கான ஆதாரங்கள் மற்றும் சில லேப்டாப்கள், 2 பென் டிரைவ்களை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
அதன் அடிப்படையில் விசாரணையில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு, புலனாய்வு பிரிவின் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சசிகலாவின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4,500 கோடி கணக்கில் காட்டாத வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் கிடைத்த பென்டிரைவ், ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்டவை இந்த வழக்கில் பல முக்கிய தகவல்களை தந்துள்ளன என அதிகாரிகள் கூறிவருகின்றனர். மேலும் இதுகுறித்து வருமானவரித்துறையிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளிவராத நிலையில் அதிகாரிகள் இத்தகவலை கசியவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.