India

சொத்து வழக்கில் டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட்

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதிசெய்யப்பட்ட பிறகும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் டிடிவி தினகரன் சகோதரி சீதளாதேவி மற்றும் அவரது கணவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

சசிகலாவின் அக்கா மகள் மற்றும் டிடிவி தினகரன் சகோதரி சீதளாதேவி, அவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். இவர் ரிசர்வ் வங்கியில் ரூபாய் நோட்டி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது சி.பி.ஐ. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அவர்கள் வருமானத்துக்கு அதிகமாக 1.68 கோடி ரூபாய் சொத்து சேர்த்தது உறுதியானதையடுத்து அவர்களுக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் தண்டனை விதித்தது. சசிகலாவின் அக்கா மகள் சீதளாதேவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 லட்ச ரூபாய் அபராதமும், அவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 20 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த நவம்பர் 16-ம் தேதி, எஸ்.ஆர்.பாஸ்கரன் மற்றும் சீதளாதேவிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பளித்தது. தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர்கள் இருவரும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதையடுத்து சீதளாதேவி மற்றும் பாஸ்கரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து இன்று உத்தரவிட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top