News

தேரரின் உடலை முற்றவெளியில் தகனம் செய்வதற்கு விக்னேஸ்வரன் எதிர்ப்புத் தெரிவித்தமைக்கு காரணம் என்ன?

யாழ். நாக விகாரையின் விகாராதிபதியின் உடல் யாழ்ப்பாணத்தில் இந்து கோவிலுக்கு அருகில் தகனம் செய்யப்பட்டமையே பிரச்சினைக்கு காரணம் என வடக்கு முதலமைச்சர் தெரிவித்தாக நாக விகாரையின் தற்போதைய விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் கூறியுள்ளார்.

நாக விகாரையின் விகாராதிபதி மடிகே பஞ்ஞாசீக மகா நாயக்க தேரரின் உடல் தகனம் கடந்த 22ஆம் திகதி முற்றவெளி மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று யாழ். நாக விகாரையில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“ விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வது தொடர்பாக யாழ். மாநகரசபையிடம் கேட்டிருந்தோம். அவர்கள் அந்த இடம் தமக்கு சொந்தமானது அல்ல என கூறியதுடன் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான காணி என சொன்னார்கள். பின்னர் தொல்லியல் திணைக்களத்தை சந்தித்து அனுமதியை பெற்றிருந்தோம்.

தகன கிரியை நிறைவடைந்த பின்னர் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை தொடர்பு கொண்டு பேசியபோது இந்து கோவிலுக்கு அருகில் தகனம் செய்யப்பட்டமையினாலேயே பிரச்சினை எழுந்தது என கூறினார். இந்த விடயத்தை முன்னதாகவே கூறியிருந்தால் நாங்கள் கோவில் நிர்வாகத்துடன் பேசியிருப்போம். மேலும் விகாராதிபதி ஒருவர் இறந்தால் அவருடைய உடல் பொது இடத்திலேயே தகனம் செய்யப்படும் என்பது முதலமைச்சருக்கு தெரியும்.

இதேபோல் தகன கிரியையில் இராணுவம் மற்றும் பொலிஸார் கலந்து கொண்டமை தொடர்பாகவும் ஊடகங்கள் வாயிலாக விமர்சனங்கள் எழுந்தன. பொதுவாக விகாராதிபதி ஒருவர் இறந்தால் அவருடைய இறுதி சடங்கில் பௌத்தர்கள் பலர் கலந்து கொள்வார்கள். ஆனால் இங்கே பௌத்தர்கள் இல்லை. ஆகவே பௌத்தர்கள் என்ற வகையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் சிலர் தங்களுடைய அரசியல்நோக்கங்களுக்காக நாக விகாரையை இழுத்து இனவாதமாகவும், மதவாதமாகவும் பேசுகிறார்கள்.

ஆனால் நாக விகாரை இனவாதம், மதவாதம் பரப்பும் இடமல்ல. அது இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் உண்டாக்கும் பாலமாகும். அதனை விட பெருமளவில் சமூக சேவைகளை செய்யும் இடமாகவும் உள்ளது. எனவே முற்றவெளி மைதானத்தில் விகாராதிபதியின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் நினைவுதூபி அல்லது விகாரை அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top