நிரந்த அமைதிக்கும், நல்லிணக்கத்துக்கும் கனடா உதவும்! – தூதுவர் டேவிட் மைண்ரோ

இலங்கையில் நிரந்தர அமைதிக்கும், நல்லிணக்கத்துக்கும் கனடா தொடர்ந்து உதவும் என, இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மைண்ரோ தெரிவித்தார். மட்டக்களப்புக்கு இன்று பயணம் செய்த அவர், கனேடிய உலக பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின் உதவியுடன், மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் கணிணி பயிற்சி வகுப்பை பார்வையிட்டதன் பின்னர், அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, “இலங்கையின் நிரந்த அமைதி, சமாதானம், நல்லிணக்கத்துக்காக, கனடா தொடர்ந்து உதவி செய்யும். கனடாவில் இலங்கையர்கள் அதிகம் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தோர் அதிகமாக உள்ளனர். இவர்கள் அனைவரும் கனடாவின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பு செய்து வருகின்றனர்.
இலங்கையில், பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதுடன், வலுவிழந்தோர், மாற்றுத்தினாளிகளின் முன்னேற்றத்துக்கும், அவர்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்தவும் நாம் உதவி செய்து வருகின்றோம். இலங்கையில் தற்போது நிலவும் சமாதான சூழலும் நல்லிணக்கமும் ஆரோக்கியமாகும். இதனை மேலும் வலுப்படுத்த கனடா அக்கறை காட்டி வருவதுடன் அதற்காக உதவி செய்தும் வருகின்றது.
மேலும், இங்கு வாய்பேச முடியாத மாணவர்கள் பங்கு கொண்டுள்ள இந்த பயிற்சி நெறியானது, அவர்களின் வாழ்க்தைத் தரத்தை உயர்த்துவதற்கும் பெரிதும் உதவியாக இருக்கும். நான் இலங்கைக்கு தூதவராக வந்து நான்கு மாதங்களாகின்றன. மட்டக்களப்புக்கு நான் விஜயம் செய்வது இதுவே முதற் தடவையாகும்” எனவும் தெரிவித்தார்.