கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேட்டி அணிந்து பாரம்பரிய முறையில் தமிழ் சமூக மக்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாடினார்.
பொங்கல் தினமான ஜனவரி 14ஆம் திகதி, கனடாவில் உள்ள தமிழ் மக்களுக்கு அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது பொங்கல் வாழ்த்து உரையினை ஆற்றினார். அவர் கூறுகையில், ‘வணக்கம், இன்று கனடாவில் உள்ள தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்கள், நான்கு நாள் நடக்கும் அறுவடை பண்டிகையின் தொடக்கமாக தைப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்.
தை பொங்கல் அறுவடை பரிசுகளுக்கு நன்றி கூற வேண்டிய தருணம் இது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து, அமைதி மற்றும் மகிழ்ச்சியை கொண்டாட கிடைக்கும் ஒரு வாய்ப்பு பொங்கல் திருநாள்.
கனடா தமிழர்களின் வலுவான வேர்களை பிரதிபலிக்க ஜனவரியை நாங்கள் தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டாடுகிறோம், கனடாவில் உள்ள தமிழர்கள் நமது நாட்டிற்கு முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளனர்.
மேலும் கனடாவை திறந்த மனதோடு, அனைவருக்குமான வலுவான நாடாக மாற்ற கனடா மக்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்கள். இந்த 2018யில் நாம் இணைந்து முன்னோக்கிச் செல்லும்போது நம்மை ஒன்றிணைக்கும் மதிப்புமிக்க விடயங்களை தொடர்ந்து கொண்டாடி, கனடாவை சிறந்த மற்றும் அனைவருக்கும் இணக்கமான நாடாக உருவாக்க தினமும் உழைப்போம்.
எனது குடும்பம் சார்பாக நானும், சோஃபியும் தைப் பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் இனிய தமிழ் பாரம்பரிய மாத வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறோம். இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார். மேலும், தமிழர்களோடு அவர் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை, அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்