அமெரிக்க தூதரகம் மீது கையெறி குண்டு வீச்சு

மான்டிநெக்ரோ நாட்டில் அமெரிக்க தூதரகம் மீது கையெறி குண்டு வீச்சு நடைபெற்றது.
தென் கிழக்கு ஐரோப்பிய நாடான மான்டிநெக்ரோ நாட்டின் தலைநகரான போத்கோரிக்கா நகரில் அமெரிக்க தூதரகம் செயல்பட்டு வருகிறது. நேற்று அங்கு வழக்கம் போல பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தன.
அப்போது அந்த தூதரக கட்டிடத்துக்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து கையெறி குண்டுகளை வீசினார். அதைத் தொடர்ந்து அவர் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டு சாதனத்தை இயக்கி வெடிக்க வைத்தார். இதில் அவர் உடல் சிதறி பலி ஆனார்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸ் படையினர் அங்கு விரைந்து வந்து அந்தப் பகுதிக்கு ‘சீல்’ வைத்தனர். அதே நேரத்தில் கையெறி குண்டு வீச்சால் அமெரிக்க தூதரக கட்டிடத்துக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்று அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
தாக்குதல் நடத்திய நபர் யார், பயங்கரவாதியா, அவரது பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.