எத்தியோப்பியாவில் கோர விபத்து- 38 பயணிகள் உயிரிழப்பு

எத்தியோப்பியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் அம்ஹாரா மாநிலம், லேகம்போ மாவட்டத்தில் மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. டெஸ்சி மற்றும் மெக்கானே சேலம் நகரங்களுக்கு மத்தியில் இந்த விபத்து ஏற்பட்டது. அதிவேகத்தில் சாலையைவிட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததால் பேருந்தின் ஒரு பகுதி முற்றிலும் சிதைந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 28 ஆண்கள், 10 பெண்கள் என மொத்தம் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் ஆவர். 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.