கடும்போக்காளர்கள் கைகள் ஓங்காதிருப்பதை உறுதி செய்யவும்

அம்பாறை தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்
அம்பாறையில் நேற்று முன்தினம் (26) இரவு இடம்பெற்ற தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அம்பாறைப் பிரதேசத்தில் முஸ்லிம் சமூகத்தினருக்கெதிராக நடாத்தப்பட்ட தாக்குதல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். எந்த வகையிலான வன்முறைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வலியுறுத்தும் அதேவேளை, பிரிவினையையும் ஒற்றுமையின்மையினையும் உருவாக்கும் வகையில் இத்தகைய விரோதச் செயற்பாடுகளில் ரூடவ்டுபட்டுள்ளோர் மக்களிடையே இன முறுகலைத் தோற்றுவிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் இருந்து விலகி நிற்க வேண்டுமென நான் வற்புறுத்த விரும்புகின்றேன்.
அம்பாறைச் சம்பவத்தின் குற்றவாளிகளுக்கெதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்ற அதேவேளை, இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதனை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளுகின்றேன்.
கடந்த காலத்தில் இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றதனையும் அத்தகைய ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளினால் ஏற்பட்ட பாதக விளைவுகளையும் நாம் அனுபவித்திருக்கின்றோம். எனவே, நான் பொலிசாரிடமும் ஏனைய அதிகாரிகளிடமும் இத்தகைய சம்பவங்களுக்கு எதிராக பாகுபாடின்றி சட்டத்தினை அமுல் படுத்துமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.
இந்தப் பிரதேசங்களிலே சமாதானமும் அமைதியும் பேணப்படுவதனை சமயத் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டுமென நான் தாழ்மையாகக் கேட்டுக்கொள்ளும் அதேவேளை, இச்சம்பவங்களின் நிமித்தம் கடும்போக்காளர்களின் கைகள் ஓங்காமல் இருப்பதனை உறுதி செய்யுமாறும் வேண்டிக்கொள்கிறேன்.
இச்சந்தர்ப்பத்தில் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையின் முக்கியத்துவத்தினை எடுத்துக் காட்டும் வகையில் அமைதியைக் கடைப்பிடித்து நடந்துகொள்ளுமாறு அம்பாறை மற்றும் ஏனைய பிரதேசங்களிலுள்ள மக்களிடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன்.