கண்டியில் நிலைமை மோசம், பகலிலும் தலைவிரித்தாடிய வன்முறைகள்!

கண்டி மாவட்டத்தில் அக்குறண, கட்டுகஸ்தோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று பிற்பகல் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால், பதற்றநிலை மோசமடைந்துள்ளது. அக்குரண, 8 ஆவது மைல் கல், கட்டுகஸ்தோட்ட பகுதிகளில் முஸ்லிம்களின் 25 இற்கு மேற்பட்ட கடைகள், தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.
வன்முறைக் கும்பலைக் இராணுவத்தினர் பொல்லுகளுடன் துரத்திச் சென்றனர். இதனால் பல்வேறு பகுதிகளிலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்களை அமைதியாக இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம், முஸ்லிம் தலைவர்கள் கோரி வருகின்றனர்.
ஊரடங்கு அமுல்
உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் வீட்டினுள் அமைதியான முறையில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொலிசாரின் விடுமுறைகள் ரத்து
நாட்டில் நிலவிய அசாதாரண நிலையை தொடர்ந்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் அனைத்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
காலவரையின்றி மூடப்பட்ட பாடசாலைகள்
கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட சகல அரச பாடசாலைகளுக்கும் கால வரையறையின்றி மூடப்படுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு விரைந்தார் ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டிக்கு விரைந்து சென்றுள்ளார். அவர் அமைதியை ஏற்படுத்துவது குறித்து மதத்தலைவர்கள், ஆயுதப்படையினருடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
மாத்தளையிலும் பதற்றம்
மாத்தளை, அம்பதென்ன பகுதியில் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தப் பகுதிகளிலுள்ள கடைகள் உடைக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிய வருகிறது. கடைகளில் வேலை செய்தவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சிலர் காயமடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக கண்டி நிர்வாக எல்லைக்குட்பட்ட சில பகுதிகளில் இனவாத மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மாத்தளை வரை அது தீவிரமடைந்துள்ளது. அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாடசாலைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.