கோத்தபாயவை பிரதமராக்கும் தீவிர முயற்சியில் மைத்திரி!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை பிரதமர் பதவியில் அமர்த்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஜனாதிபதி முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி கட்சி தெரிவித்துள்ளது.
அதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க பிபிசி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அரசியல் அவசியம் என்ன என்பது கடந்த உள்ளூராட்சி தேர்லில் அவர் செயற்பட்ட முறையில் தெளிவாக தெரிகின்றது. அவர் ஜனாதிபதி பதவியை விட்டு விலக மாட்டார். அது தெளிவாகியுள்ளது.
இதனால் மீண்டும் ஜனாதிபதியாக அவருக்கு, மஹிந்தவிடம் உள்ள வாக்குகள் அவசியம். இதன் காரணமாக மஹிந்த ராஜபக்சவை தவிர அவரது குடும்பத்தின் ஏனையவர்களின் ஆதரவை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் அவருக்குள்ளது.
எனவே கோத்தபாய ராஜபக்சவை இணைத்துக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.