தமிழ் மக்களின் அகதி வாழ்வுக்கு படையினர் காரணமல்ல!: இராணுவத் தளபதி .

தமிழ் மக்கள் 28 வருட காலமாக அகதி வாழ்க்கை வாழ்வதற்கு இலங்கை இராணுவம் காரணமல்ல, தமிழ் மக்களை தவறாக பயன்படுத்திய தீவிரவாத அணியொன்று தான் காரணம் என இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை இராணுவம் வடக்கு கிழக்கு மற்றும் அனைத்து மக்களுக்கும் உரிமையானது எனவும் தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை உயர்பாது காப்பு வலயத்தில் 683 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம் என்பது வடக்கு கிழக்கு மற்றும் அனைத்து மக்களுக்கும் உரிமையான ஒன்றாகும்.
எமது சகோதர சகோதரிகள் கடந்த 28 ஆண்டுகளாக அகதி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் துன்பப்பட்டதை நான் அறிவேன். இந்த துரதிர்ஷ்ட சம்பவம் எங்களது அல்லது உங்களது தவறால் ஏற்பட்டதல்ல. அதற்கான காரணம் ஒரு தீவிரவாத அணியொன்று தமது பெயரை பாதுகாக்க உங்களை தவறான விதத்தில் பயன்படுத்தியமையே.
உங்களது இராணுவத்தினராகிய நாம் தீவிரவாதத்தை ஒழித்து உங்களுக்கு நல்வாழ்வு தருவதற்காகவே மிகவும் கஷ்டப்பட்டு யுத்தத்தில் ஈடுபட்டு மீளவும் உங்கள் நிலத்தை உங்களிடமே ஒப்படைக்கின்றோம். இராணுவத்தினிடம் இருந்த காணிகளில் 2009ற்கு பின்னர் 80/100 வீதமான இட ங்கள் இன்று வரை பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
புது வருடத்திற்கு அன்பளிப்பாக காணி விடுவிக்கப்படும் என முன்னர் இங்கு வந்த போது கூறியிருந்தேன். அதேபோன்று நேற்று அந்த அன்பளிப்பு உங்களிடம் வழங்கப்பட்டுள்ளது. எந்த அரசியல் நோக்கத்துக்காகவும் நாங்கள் காணிகளை விடுவிக்கவில்லை. அரச ஊழியர்கள் உங்களுக்காகவே சேவை செய்கின்றனர்.
அதே போன்று இராணுவமும் உங்களுக்காகவே சேவை செய்கின்றனர். உங்கள் வேலைத்திட்டமும், இராணுவத்தின் வேலைத்திட்டமும் இனிவருங் காலங்களில் சமனாக இருக்க வேண்டும் என்று முயற்சித்து கொண்டிருக்கின்றோம். அவ்வாறு இருந்தால் உங்கள் வாழ்வில் காணப்படும் தேவைகள் பூர்த்தியடையும் என்று நம்புகின்றோம்.
இனிவரும் காலங்களிலும் உங்களுடைய இந்த இராணுவம் உங்களுக்காக சேவை செய்யும். உங்கள் நல்வாழ்வுக்காகவே இதனை கூறுகின்றோம், அதேபோன்று எமது நாட் டில் இன்னுமொரு கொடிய யுத்தம் மேற்கொள்ளப்படக் கூடாது என்பதற்காகவும் நாம் இந்த வேலைத்திட்ட த்தை மேற்கொள்கின்றோம் என்றார்.