மதுரையில் நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தீக்குளித்த மதிமுக நிர்வாகி ரவி உயிரிழப்பு

மதுரையில் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த ம.தி.மு.க. நிர்வாகி ரவி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
தேனி மாவட்டம், போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் கடந்த 31-ம் தேதி நடைபயணம் தொடங்கினார். அவரது பயணத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வைகோ விழிப்புணர்வு நடைபயணம் தொடங்கிய மேடையின் அருகே ஒருவர் திடீரென தீக்குளித்தார். அவரது உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விசாரணையில் அவர் பெயர் சிவகாசியைச் சேர்ந்த ம.திமு.க. தொண்டர் ரவி என்பது தெரியவந்தது. தொண்டரின் இந்த செயலுக்கு வைகோ வருத்தமும் வேதனையும் தெரிவித்தார்.
இந்நிலையில், மதுரை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.