News

கைதுப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தினார் என சிறிதரன் எம்.பி ரணிலிடம் முறைபாடு!

கிளிநொச்சி வனவளத்திணைக்கள அதிகாரி ஜெயச்சந்திரன் என்னை ஊற்றுப்புலம் காட்டுக்குள் வைத்து கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தினார். ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் கூட அவர் என்னுடன் அப்படி நடந்து கொண்டார் என பாராளுமன்ற உறுப்பினர் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முறைபாடு செய்துள்ளார்.

இன்று திங்கள் கிழமை கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரசிங்க தலைமையில் இடம்பெற்றது. இதன் போதே பாராளுமன்ற உறுப்பினர் பிரதமரிடம் இவ் முறை்பபாட்டை பகிரங்கமாக தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

குறித்த அதிகாரி ஒரு மனிதரை போல நடந்துகொள்ளவில்லை, இடுப்பில் பிஸ்டலுடன் என்னை ஊற்றுப்புலம் காட்டுக்குள் வைத்து மிரட்டினார். அவர் ஒரு தமிழ் அதிகாரி. அவர் மக்களின் நலன்களுக்கு புறம்பாகவே நடந்துகொள்கின்றார். இவரின் செயற்பாடு காணி இல்லாத மக்களுக்கு காணி வழங்குவதற்கு தடையாக இருக்கிறது. எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் குறித்த விடயம் தொடர்பில் ஆளுநர் மற்றும் பொலீஸாருக்கு முறையிடுமாறும் தன்னால் விசாரணை செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்

இது தொடர்பில் குறித்த அலுவலரான மாவட்ட உதவி வன உத்தியோகத்தர் ஜெயசந்திரனை தொடர்பு கொண்டு வினவிய போது

பாராளுமன்ற உறுப்பினர் கடந்த வருடம் பத்தாம் மாதம் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் ஊற்றுப்புலத்தில் நிற்கின்றேன் அங்கு குடியேற்ற மக்களின் பிரச்சினை தொடர்பில் பேச வேண்டும் எனவே அங்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதன் போது நானும் எனது உத்தியோகத்தர்கள் இருவரும் அங்கு சென்றோம் அப்போது அடர்ந்த காட்டுக்குள் இவர்களால் குடியேற்றப்பட்ட அந்த மக்களுடன் இருந்தார். நான் எனது வாகனத்தை விட்டு இறங்கும் போது அனுமதி பத்திரம் உள்ள கைத்துப்பாக்கியை வாகனத்திற்குள் வைத்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர் இருந்த இடத்திற்கு சென்றேன்.

அங்கு அவர் மக்கள் முன்னிலையில் இந்த காணிகளை இவர்களுக்கு வழங்க வேண்டும் நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் என்றார். இதன்போது நான் இந்தப் பிரச்சினை தொடர்பில் எனக்கு முன்பு இருந்த அதிகாரிகளால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு இடம்பெற்று வருகிறது. இது அடர்ந்த காடு இங்கு குடியேறுவது சட்டத்திற்கு புறம்பானது எனவே நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கும் என்பதை பொருத்தே இனி செயற்பட முடியும் என்றேன். இவ்வளவுதான் அன்று நடந்தது.

ஆனால் இன்று ஒரு கௌரவ பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பாக பிரதமரிடம் தெரிவித்தார். நான் அவ்வாறு துப்பாக்கியை கொண்டு பாராளுமன்ற உறுப்பினரை அச்சுறுத்தியிருந்தால் அவரது மெய்பாதுகாவலர்கள் என் மீது துப்பாக்கி பிரயோகம் செய்திருக்க முடியும். சரி அவ்வாறுதான் இடம்பெறவில்லை என்றால் உடனடியாகவே பொலீஸ் நிலையத்திலோ அல்லது எனது திணைக்களத்தின் மேலதிகாரியிடமோ முறையிட்டிருக்கலாம். ஆனால் இவற்றையெல்லாம் விடுத்து பல மாதங்களுக்கு பின்னர் இப்படியொரு அபாண்டமான குற்றச்சாட்டை என் மீது சுமத்துவதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே கருதுகிறேன்.

வனவளத் திணைக்களம், புகையிரத திணைக்களம் மின்சார சபை போன்ற பல திணைக்களங்களுக்கு தமிழ் பேசும் அதிகாரிகளை நியமிக்குமாறு வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் என் தொடர்பில் ஏன் இவ்வாறு நடந்துகொள்கின்றார் எனத் தெரியவில்லை என ஜெயசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top