298 பயணிகளுடன் விபத்துக்குள்ளான மலேசிய விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு மலேசிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான MH17 பயணிகள் விமானம் 283 பயணிகள் மற்றும் 15 விமான ஊழியர்கள் என 298 பேருடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
ரஷ்ய எல்லையருகே விமானம் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
உக்ரைனின் எல்லையில் இருந்து, ரஷ்ய எல்லைக்குள் விமானம் நுழையவேண்டிய தருணத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த 298 பேரும் பரிதாபமாக பலியாகினர்.
இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடந்து வரும் வேளையில், விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நெதர்லாந்தின் தேசிய பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்பு பிரிவின் தலைவரான வில்பர்ட் பவுலிஸன் கூறியுள்ளார்.
ரஷ்யாவின், விமானத்தை தாக்கி அழிக்கும் இராணுவத்தின் பிரிவிலிருந்து குறித்த ஏவுகணை ஏவப்பட்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால் இதற்கு தொடர்ந்து ரஷ்யா மறுப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.