ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் கவர்னர் உட்பட 9 பேர் பலி,26 பேர் படுகாயம் …

ஆப்கானிஸ்தானில் அரசு அறிவித்த போர் நிறுத்தத்துக்கு இடையில் தலிபான்கள் இன்று நடத்திய தாக்குதலில் மாவட்ட கவர்னர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் கடந்த 16 ஆண்டுகளாக நடந்துவரும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தலிபான் அமைப்பை அரசியல் இயக்கமாக அங்கீகரிக்க போவதாக அதிபர் அஷ்ரப் கானி கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்தார்.
இதற்கிடையில், புனிதமான ரமலான் பண்டிகை காலத்தில் ரத்தம் சிந்தப்படுவதை தவிர்க்கவும், உயிர் பலிகளை தடுக்கவும், அரசுதரப்பில் 8 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ள மறுத்த தலிபான் அமைப்பினர் 3 நாட்கள் மட்டும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டனர்.
இந்நிலையில், பர்யாப் மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியை கைப்பற்றுவதற்காக தலிபான் பயங்கரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் கோஹிஸ்ட்டனாட் மாவட்ட கவர்னர் அப்துர்ரஹ்மான் பன்னாஹ் என்பவர் கொல்லப்பட்டார். கோஹிஸ்ட்டனாட் மாவட்டத்தின் மையப்பகுதியை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இருதரப்பினருக்கும் இடையிலான மோதலில் அரசுப் படைகளை சேர்ந்த மேலும் 8 பேர் உயிரிழந்தனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இதேபோல், நாட்டின் தென்பகுதியில் உள்ள கஸ்னி மாகாணத்தில் மாவட்ட கவர்னர் வீட்டின் அருகே நடைபெற்ற கார் குண்டு தாக்குதலில் கவர்னர் உட்பட 26 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.