இனிமேலும் அரசுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்கிறது கூட்டமைப்பு! எம்.ஏ.சுமந்திரன் .

தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சினையை தீர்ப்பதற்கு புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டிய தேவை இருந்தமையாலேயே பலரது விமர்சனங்களையும் மீறி கூடிய காலம் அரசுக்கு ஆதரவு வழங்கியிருந்தோம். ஆனால் இனிமேலும் இவ்வாறு ஆதரவு வழங்க வேண்டும் என எவரும் எதிர்பார்க்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாள் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இனிமேலும் பொறுமையோடு இருக்க வேண்டும் என சர்வதேச சமூகம் கூட எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தீர்வுத் திட்டத்திலோ மக்களது அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பதிலோ முன்னேற்றம் ஏற்படவில்லையாயின் நிர்வாக முடக்கல் போராட்டங்களைச் செய்வோம் என ஏற்கனவே நாம் கூறியிருந்தோம்.
குறிப்பாக 2014ம் ஆண்டே நாம் அதனைச் செய்வதற்கு ஆயத்தமாக இருந்த போது அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதன் பின்னர் புதிய அரசுக்கு நாம் ஒத்துழைப்பாகச் செயற்பட்டாலும் எமது இலக்குகளை நாம் மறந்து விடவில்லை. புதிய அரசுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டிய தேவை எமக்கு இருந்தது. அவ் அவகாசத்தை நாம் கொடுத்திருக்கின்றோம். குறிப்பாக பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் நாம் அதனை அதிகமாகவே கடந்த மூன்றாண்டில் கொடுத்திருக்கின்றோம்.
அந்நேரத்தில் சர்வதேச சமூகமும் நாங்கள் சேர்ந்து இயங்கப வேண்டும் என எதிர்பார்த்திருந்தது. நாம் அரசுக்கு ஆதரவு கொடுக்காததாலேயே அவர்களால் எதனையும் செய்ய முடியாமல் போனது என்ற நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே பலத்த விமர்சனங்களுக்கு மத்தியிலும் நாம் ஆதரவு வழங்கியிருந்தோம். ஆனாலும் இனிமேலும் நாம் அவ்வாறு தான் இருக்க வேண்டும் என எவரும் எதிர்பார்க்கவில்லை.
சர்வதேச சமூகத்துடன் நெருக்கமான தொடர்பினை பேணுகின்றவன் என்ற அடிப்படையிலும் அவர்களது நாடித்துடிப்பை அறிந்தவன் என்ற அடிப்படையிலும் இனிமேலும் நாமத் பொறுமையோடு இருக்க வேண்டும் என சர்வதேசம் கூட எதிர்பார்க்கவில்லை. இனிமேல் எதிர்ப்புகளை காட்டவேண்டும் என்றே சர்வதேசம் எதிர்பார்க்கின்றது. அந்தவகையில் கடந்த வெள்ளிக்கிழமை யாழில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு மேற்கொண்ட நிர்வாக முடக்கல் போராட்டமானது வெறுமனே ஒத்திகை மாத்திரமே என்றார் சுமந்திரன் எம்.பி.