கனடா தீ விபத்தில் குடும்பத்தை இழந்தவர் விடுக்கும் எச்சரிக்கை !!!!

திங்களன்று கனடாவின் வான்கூவரில் நிகழ்ந்த தீ விபத்தில் தனது மனைவியையும் மகனையும் இழந்த ஒரு குடும்பத் தலைவர் மரத்தாலான அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை விடுத்துள்ளார். Hossein Koshkoye Delshad (52), தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வடக்கு வான்கூவரிலுள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார்.
திங்கட்கிழமை நள்ளிரவில் Lynn Valley என்னுமிடத்தில் அமைந்துள்ள Mountain Village Garden அடுக்கு மாடிக் குடியிருப்பில் திடீரென்று தீப்பற்றியது. மரத்தாலான அந்த கட்டிடத்திலிருந்து 150க்கும் மேலானோர் உடனடியாக வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். 16 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள், அவர்களில் சிலரின் நிலைமை மோசமாக இருந்தது.
நள்ளிரவு மணி 1.30க்கு புகை வாடை வீசுவதை உணர்ந்து Delshad தனது குடும்பத்தினரை படபடவென எழுப்பினார். கீழே இருந்த ட்ராம்போலினில் குதித்து தப்பி விடலாம் என முடிவு செய்து எல்லோரையும் குதிக்கும்படி கூற அவரது மூத்த மகன் மட்டும் குதித்து விட்டான், ஆனால் அவரது மனைவியும் இளைய மகனும் குதிக்கவில்லை.
படுக்கையறையை விட்டு வெளியே வந்து பால்கனி வழியாக தப்பிக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்த்துவிட்டு மீண்டும் படுக்கையறையை நெருங்க முயலும்போது நிலைமை கைமீறிப்போய் விட்டதை Delshad உணர்ந்தார். பற்றியெரிந்த தீ Delshadஇன் மனைவியையும் இளைய மகனையும் தனது கோரப்பசிக்கு இரையாக்கியிருந்தது.
மோசமான காயங்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள Delshadக்கு அறுவைசிகிச்சை ஒன்று செய்யப்பட உள்ளது. அந்த நிலைமையிலும் அவர் தன்போல் மர வீடுகளில் வசிப்போருக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை தெரிவிக்கிறார். மர வீடுகள் ஆபத்தானவை என்று கூறும் Delshad, நீங்கள் எவ்வளவு கவனமாக இருந்தாலும் தப்ப முடியாது, அதற்கு திங்கட்கிழமை நடந்த சம்பவமே சாட்சி என்கிறார்.