News

ஜனாதிபதி கிளிநொச்சிக்கு வருவது வேடிக்கையானது! சிறீதரன் எம்.பி.

தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து அவருடைய பிள்ளைகளைக் காப்பாற்ற இயலாத ஜனாதிபதி கிளிநொச்சியில் சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பிக்க வருவது மிகவும் வேடிக்கையானது. மேற்கண்டவாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகைதரவுள்ள நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தனது மனைவியின் இறுதிச்சடங்கிற்காக சிறைச்சாலை பாதுகாப்புக்களுடன் வந்த ஆனந்த சுதாகரனுடன், அவரின் பிள்ளைகள் தந்தையுடன் இணைந்து சிறை வாகனத்தில் ஏறியமை உலகத்தின் கவனத்தையீர்த்தது.

இதனையடுத்து ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து அவருடைய பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டிருந்தது. அதேபோல் பல மனிதநேய அமைப்புக்களும் கேட்டிருந்தன. ஆனாலும் அதனை கவனத்தில் கொள்ளாத ஜனாதிபதி, 4 ஆயிரம் பிள்ளைகளை வைத்து சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சி திட்டத்தினை ஆரம்பித்து வைப்பதற்காக கிளிநொச்சிக்கு வருவது வேடிக்கையாக உள்ளது.

உண்மையில் ஜனாதிபதி சிறுவர்களை பாதுகாக்கும் நிகழ்ச்சி திட்டத்தை உள்ளார்ந்தமாக தொடங்குவதாக இருந்தால் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து அவருடைய பிள்ளைகளுக்கு முதலில் பாதுகாப்பு கொடுக்கவேண்டும். அதனை விடுத்து மக்களை ஏமாற்றும் கைங்கரியத்தை அவர் செய்ய கூடாது” என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top