போரில் கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க எதிர்ப்பு ….

போரின் போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் யோசனைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. போரின் போது பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கும் திட்டத்தின் கீழ் உயிரிழந்த புலிப் போராளிகளின் குடும்பங்களுக்கும் நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு சில அமைச்சர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது. போரில் உயரிழந்த சிவிலியன்களது குடும்பங்களுக்கு, அழிவடைந்த மத வழிபாட்டுத் தளங்களுக்கு மற்றும் போரில் உயிரிழந்த புலி உறுப்பினர்களது குடும்பங்களுக்கு நட்டஈடு அனுமதி வழங்குமாறு கோரி அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் சுவாமிநாதன் இந்த யோசனையை முன்மொழிந்திருந்தார். உயிரிழந்த புலி உறுப்பினர்களது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கப்பட முடியாது என அமைச்சர்கள் சிலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்த அமைச்சரவை பத்திரம் குறித்து நேற்று கலந்துரையாடப்பட்ட போது சில அமைச்சர்கள் இதனை கடுமையாக ஆட்சேபித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச, லலித் அத்துலத்முதலி, காமினி திஸாநாயக்க போன்றவர்களை படுகொலை செய்த புலிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டுமா என சில அமைச்சர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.