முல்லைத்தீவில் மீண்டும் புலிகள்?: அதிகாலையில் கிளைமோர், புலிக்கொடி மீட்பு என்கிறது பொலிஸ்!

இன்று அதிகாலை வேளை ஒட்டுசுட்டானில் இருந்து புதுக்குடியிருப்பு செல்லும் வீதியில் முச்சக்கர வண்டியில் விடுதலைப்புலிகளின் சீருடை மற்றும் புலிக்கொடியுடன் இருவரை கைதுசெய்துள்ளதுடன் ஒருவர் தப்பி சென்றுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
ஒட்டுசுட்டான் பகுதியில்இருந்து முச்சக்கர வண்டி ஒன்று அதிகாலை வேளை புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த போது ஒட்டுசுட்டான் பேராற்று பகுதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் முச்சக்கர வண்டியினை சோதனை செய்துள்ளார்கள். இதன்போது அதில் இருந்த ஒருவர் தப்பி ஓடியுள்ள நிலையில் இருவர் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
முச்சக்கர வண்டியினை சோதனை செய்தபோது அதில் 15கிலோகிராம் நிறையுடைய கிளைமோர் ஒன்று அதனை இயக்க பயன்படுத்தப்படும் ரிமோட்கள் ரவைகள் கைக்குண்டு புலிக்கொடி ஒன்று விடுதலைப்புலிகளின் சீருடை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தினை தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்களை ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
முதற்கட்ட விசாரணைகளின் போது கைதான இருவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தப்பிஓடிய நபர் குறித்து பொலீஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதேவேளை பேராற்றுப்பகுதியில் பெருமளவான படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்..
கைதான நபர்கள் குறித்து பயங்கரவாத விசாரணைப்பிரிவின் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தை தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இராணுவம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் இணைந்து மேலதிக விசாரணைகளையும் தப்பியோடிய மற்றைய நபரை பிடிப்பதற்கான நடவ்டிக்கையினையும் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இந்த நபர்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.