ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கால்பந்து ரசிகர்கள் மீது பாய்ந்து கார் ஒன்று விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் 8 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். ரஷ்யாவில் கால்பந்து உலக கிண்ண போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக உலகமெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ரஷ்ய தலைநகரில் குவிந்துள்ளனர். போட்டி நடைபெறும் அரங்கத்திற்கு அருகாமையிலும் தங்கும் விடுதிகளிலும் மற்றும் சாலைகள் என மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில் கால்பந்து ரசிகர்கள் கூட்டம் ஒன்றின் மீது கார் ஒன்று பாய்ந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் மெக்சிகோ நாட்டவர்கள் சிலர் உள்ளிட்ட 8 பேர் கவலைக்கிடம் என தெரியவந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய டாக்ஸி ஓட்டுனரை பொலிசார் கைது செய்துள்ளனர். கட்டுப்பட்டை இழந்த நிலையிலேயே கார் விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.