லண்டனை உலுக்கிய துப்பாக்கிச் சூடு: உயிருக்கு போராடும் இளைஞர் !
தென் லண்டனில் உள்ள பிரிக்ஸ்டன் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிக்கிய இளைஞர் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும், புதன்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்த பகுதியில் இருந்து பாதிக்கப்பட்ட இளைஞன் தப்பியதாக முதலில் கருதப்பட்டாலும் பின்னர், அவரது நண்பர்கள் சேர்ந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். லண்டனில் ஒரே வாரத்தில் நடக்கும் இரண்டாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவென பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை தென் கிழக்கு லண்டனில் 22 வயது இளைஞர் ஒருவரின் முகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவரது முகம் சிதைந்து போயுள்ளது. அந்த சம்பவத்திற்கு பின்னர் தற்போது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த பெண் மற்றும் ஆண் ஒருவரையும் பொலிசார் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். இதனிடையே தலைநகரில் அதிகரிக்கும் வன்முறை சம்பவங்களுக்கு தாம் பொறுப்பேற்பதாக மேயர் சாதிக் கான் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.