ஆந்திராவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 7 பேர் மாயம் – 23 பேர் மீட்பு..

ஆந்திர மாநிலம் கவுதமி ஆற்றில் பயணிகள் படகு நீர்ச்சுழலில் சிக்கி பாலத்தின் தூணில் மோதிய விபத்தில் படகில் இருந்த 30 பேர் ஆற்றுக்குள் விழுந்தனர். இதில் 23 பேர் மீட்கப்பட்ட நிலையில் 7 பேர் காணவில்லை.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பசுவுல்லங்கா என்னும் இடத்தில் இருந்து சலாதிவரி பாலெம் என்னும் இடம் நோக்கி பயணிகள் ஒரு படகு நேற்று மாலை கவுதமி ஆற்றில் சென்று கொண்டிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர்.
இந்த நிலையில் நீர்ச்சுழலில் சிக்கிய அந்த படகு ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் தூண் ஒன்றின் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த 30 பேரும் ஆற்றுக்குள் விழுந்து தத்தளித்தனர். இதையடுத்து விசாகப்பட்டினம் மற்றும் ராஜமகேந்திரவரம் நகரங்களில் இருந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்களுடன் உள்ளூர் போலீசாரும் இணைந்து 23 பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
எனினும் மற்ற 7 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. அவர்களை தேடும்பணி தொடர்ந்து நீடித்து வருவதாக மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.