ஆளுநரின் சர்வாதிகாரத்தை எம்மவர்கள் எதிர்பார்க்கின்றனரா?

மாகாண அமைச்சரை நியமிக்கும் அல்லது நீக்கும் அதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு உள்ளதா இல்லையா என்பதை உச்சநீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேரடியாக மத்திய அரசு மாகாண அமைச்சர்களை நியமிக்கும் ஒற்றையாட்சியையும், ஆளுநரின் சர்வாதிகாரத்தையும் தான் எம்மவர்கள் எதிர்பார்க்கின்றனரா என்றும் அவர் மாகாணசபையில் கேள்வியெழுப்பினார்
டெனீஸ்வரன் பதவி விலக்கப்படவில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதற்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடமாகாண முதலமைச்சர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக நேற்று நடைபெற்ற மாகாணசபை அமர்வில் முதலமைச்சர் விளக்கமளித்தார். அதன்போதே மேற்கண்ட விடயங்களை அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
உச்ச நீதிமன்றத்தின் முன் மேன்முறையீட்டுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் தீர்மானத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றம் எந்த ஒரு மாகாண முதலமைச்சர் தானும் தமது அமைச்சர் குழாமின் அமைச்சர் ஒருவரை நியமிக்கவோ, பதவி இறக்கவோ முடியாது என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.
அந்த அதிகாரம் ஆளுநருக்கே உண்டு எனக் கூறி டெனீஸ்வரனின் பதவி இறக்கத்தை ஆளுநர் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் பிரசுரிக்காத காரணத்தினாலோ என்னவோ டெனீஸ்வரன் தொடர்ந்து பதவியில் இருக்கின்றார் என்று தீர்மானித்துள்ளார்கள்.
ஆனால் இத்தீர்மானம் குழப்பத்தை விளைவித்துள்ளது. டெனீஸ்வரனையும் சேர்த்தால் அமைச்சர்களின் எண்ணிக்கை ஆறாக மாறும். இது சட்டத்திற்குப் புறம்பானது. ஐந்திலும் விட அதிகமான அமைச்சர்கள் இருந்தால் அது அரசியல் அரசியலமைப்புக்கு எதிராக அமையும் என்பதுடன், சட்டவலுவற்றதாக அமையும். அதனால் அமைச்சர் குழாமின் செயற்பாடுகள் சட்டபூர்வமற்றதாய் அமைவன. அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக செயற்படுவது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக நடந்து கொள்ள நாங்கள் தயாரில்லை.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை மீற முடியாது. ஆகவே தான் நாங்கள் இதுபற்றிய உச்ச நீதிமன்ற தீர்மானத்தை எதிர்பார்த்து நிற்கின்றோம்.
இந்த வழக்கில் முக்கியமான சட்டப் பிரச்சினைகளுக்கு உச்ச நீதிமன்ற நீதியரசர்களே முடிவுகளை எடுக்க முடியும்.
எமது நிலைப்பாடு மாகாண அமைச்சர் குழாமில் உள்ள அமைச்சர்களை நியமிக்கும் மற்றும் பதவி இறக்குவதைத் தீர்மானிப்பது அந்தந்த மாகாணங்களின் முதலமைச்சர்களையே சார்ந்ததாகும் என்பதேயாகும்.
அரசியல் யாப்பின் 154 (5)ன் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு அமைய ஆளுநர் தானாக அமைச்சர் ஒருவரை நியமிக்க முடியாது. முதலமைச்சரின் சிபார்சின் பெயராலேயே அவர் எவரையாவது அமைச்சராக நியமிக்க முடியும். இது சம்பந்தமாகத் தானாக அவர் இயங்க முடியாது.
தற்போதுள்ள நிலையில் ஐந்துக்கு மேற்பட்ட அமைச்சர்கள் பதவி வகித்தால் அது சட்டத்திற்குப் புறம்பாகும். எமது நடவடிக்கைகள் சட்ட வலுவற்றதாக மாறிவிடுவன. ஆகவே தான் நாங்கள் உச்ச நீதிமன்ற தீர்மானத்தை எதிர்பார்த்துள்ளோம்.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானப்படி முதலமைச்சர், அமைச்சர் ஒருவரை நியமிக்கவோ பதவி இறக்கவோ முடியாது.
ஆகவே தற்போது எந்த ஒரு அமைச்சரையும் பதவி இறக்க என்னால் முடியாது. முன்னர் எனது சிபார்சுக்கு அமைய தொடர் நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கிருந்தது. முதலமைச்சர் என்ற கடமையில் இருந்து நான் தவறவில்லை. என் வரையறைக்குள் இருந்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை நான் எடுத்துள்ளேன். வர்த்தமானிப் பிரசுரங்கள் போன்றவை எனது வரையறைக்கு அப்பாற்பட்டன.
ஆளுநருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் இருக்கின்றதென்றால் அதிகாரப்பகிர்வுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழும். நேரடியாக மத்திய அரசு மாகாண அமைச்சர்களை நியமித்து ஒற்றையாட்சியை நடத்த முடியுமென்றாகின்றது. இவ்வாறான ஒற்றையாட்சியையும் ஆளுநரின் சர்வாதிகாரத்தையும்தான் எம்மவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தெற்கில் உள்ள மாகாண சபைகளையும் இவ்வாறான தீர்மானங்கள் பாதிக்கின்றன. ஆகவே அதிகாரப் பரவலாக்கம் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டதா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்.
ஒரு சில நாட்களுள் உச்ச நீதிமன்றம் எமது மேன்முறையீட்டின் காரணமாகப் பூர்வாங்கத் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.