இமயமலை சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழன்… குவியும் பாராட்டுக்கள்!

இமயமலை சிகரத்தின் உச்சியில் இந்திய தேசியக்கொடியை நட்டு வைத்து தமிழகத்தை சேர்ந்த மாணவர் சாதனை படைத்துள்ளார். பனிமூடிய இமயமலை சிகரத்தில் ஏறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. சுமார் 6,167 மீட்டர் உயரம் கொண்ட இமயமலையை நோக்கி ஏராளமானோர் படையெடுக்கலாம். ஆனால் அதன் உச்சியை அடைந்து கொடியை நாட்டுபவர்கள் சிலர் மட்டுமே.
அந்த வரிசையில் பழனியை சேர்ந்த தமிழக மாணவன் நிரஞ்சன், இமயமலையின் உச்சியை அடைந்து தேசிய கோடியை நட்டு வைத்துள்ளார். பள்ளி பருவத்தில் இருந்தே என்.சி.சி பிரிவில் இருந்து வந்த நிரஞ்சன், தன்னுடைய கல்லூரி பருவத்திலும் அதனை தொடர்ந்து வந்துள்ளார். பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த நிரஞ்சன், படிப்பிலும் கெட்டிக்காரனாக இருந்துள்ளார்.
என்.சி.சி அமைப்பின் மூலம் தேசிய மாணவர் படையில் பயிற்சி பெற்ற நிரஞ்சன், புதுடெல்லியிலிருந்து இமயமலைக்கு 60 நாட்கள் நடைபெற்ற பயிற்சியிலும் கலந்துகொண்டார். 30 மாணவர்கள் கலந்துகொண்ட இந்த பயிற்சியில் 11 மாணவர்கள் மட்டுமே சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளனர்.
அந்த வகையில் உச்சியை அடைந்த தமிழக மாணவன் நிரஞ்சனுக்கு பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், பழனியாண்டவர் கலைக்கல்லூரி முதல்வர் அன்புச்செல்வி, என்.சி.சி. அதிகாரி பாக்யராஜ், மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.