News

கிளிநொச்சியில் 13 வருடங்களின் பின்னர் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட தமிழ் அரசியல் கைதி

தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி 13 வருடங்களின் பின்னர் தந்தையின் இறுதிச் சடங்கில் இன்று கலந்துகொண்டார். கடந்த 18-07-2018 அன்று இயற்கையெய்திய முனியப்பன் தங்கவேல் என்ற சிவகுமாரின் தந்தையாரின் இறுதிக் கிரியைகளில் பங்கு கொள்வதற்கு அவருக்கு ஒருமணிநேரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்ற மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அரசியல்கைதியான சிவகுமார் பலத்த பாதுகாப்பின் மத்தியில் அழைத்து வரப்பட்டார். 3 பிள்ளைகளின் தந்தையான இவர் 13 வருடங்களாக சந்தேக நபராக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.

2006ம் ஆண்டு 8ம்மாதம் 10ம் திகதி கொழும்பு கரந்தெனியா பகுதியில் வாகனத்துடன் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட இவர் பொறள்ள பகுதியில் அமைந்துள்ள நியூ மகசின் சிறைச்சாலையில் அரசியல் கைதியாக உள்ளதாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். நீண்ட காலமாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக பலப்பிட்டி உயர்நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருவதாக அவரது மனைவி சுமதி தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில் சிவகுமாருக்கு வழங்கப்பட்ட ஒருமணிநேர காலம் நிறைவடைந்ததும் அவரை சிறைச்சாலை அதிகாரிகளை அழைத்து சென்றபோது உறவினர்கள் அவரை தழுவினர். 13 வருடங்களாக கணவன், தந்தையை பிரிந்திருந்த ஆதங்கத்தில் மனைவியும், பிள்ளைகளும் சிவகுமாரை தழுவி கண்ணீர் விட்டழும் காட்சிகள் கிளிநொச்சி மண்ணை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியது.

சிவகுமார் சிறைச்சாலை பேருந்தில் ஏறும் காட்சியை கண்ட பிள்ளைகள் கதறி அழுதனர். சிறைச்சாலை பேருந்தில் ஏறிய சிவகுமாரின் கண்களிலிருந்து நீர் வழிய அவர் பேருந்திலிருந்து கையசைத்தபோது அவரது பிள்ளைகளும், உறவினர்களும் வேதனையில் துடித்த காட்சிகள் துக்கத்தை அதிகரித்தது.     

 

 

 

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top