கோத்தாபய உள்ளிட்ட 07 பேருக்கு அழைப்பாணை!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்ஷவின் தந்தையான டி.ஏ. ராஜபக்ஷவின் அருங்காட்சியகம் நிர்மாணத்தில் அரச நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணை தொடர்பில், எதிர்வரும் செப்டெம்பர் 07 ஆம் திகதி, கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, அவர் உள்ளிட்ட 07 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (20) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆட்சியின் போது நிர்மாணிக்கப்பட்ட டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியக நிர்மாணத்தின் போது, ரூபா 8 கோடிக்கும் அதிகமான அரச நிதி, முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பில் கோத்தாபய உள்ளிட்ட 07 பேர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த விடயம் தொடர்பில், மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, சட்ட மா அதிபரின் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், அதற்கமைய சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் தெரிவித்து, அழைப்பாணை விடுக்குமாறு, பொலிஸ் நிதி மோசடி பிரிவினால் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கபபட்டது.
இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இவ்வாறு அழைப்பாணை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.