சத் நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 18 பேர் பலி!

ஆப்ரிக்க நாடான சத் நாட்டில் போகோ ஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த 2009-ம் ஆண்டில் ஊடுருவிய போகோ ஹரம் தீவிரவாதிகள் அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்த துவங்கினர். போகோ ஹரம் பயங்கரவாதிகளின் தாக்குதலால் அப்பகுதியில் இதுவரை சுமார் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
போகோ ஹரம் தீவிரவாதிகளை ஒழிப்பதற்கான நைஜீரியா நாட்டின் ராணுவ முயற்சியில் சத், கேமரூன் மற்றும் நைஜர் ஆகியவை இணைந்துள்ளன.
இந்நிலையில், சத் நாட்டின் தபவுவா நகரின் தெற்கே உள்ள கிராமம் ஒன்றில் போகோ ஹரம் அமைப்பினை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பகுதி மக்கள் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், அப்பகுதியில் இருந்த பெண்கள் சிலரையும் பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மே மாதத்தில் சத் ராணுவ சோதனை சாவடி பகுதியில் நடந்த தாக்குதலில், 4 அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர் ஒருவர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.