சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? – யஸ்மின் சூக்கா

சுமார் பத்து வருடங்களிற்கு முன்னர் ஹெய்ட்டியில் சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கை படையினர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த விபரங்களை கோரும் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் மனுவிற்கு, இலங்கை வெளிப்படையான பதிலை வழங்கவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஹெய்ட்டில் ஐநா அமைதிப்படையில் பணியாற்றிய வேளை சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட படையினரிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த விபரங்களை ஊடகவியலாளர் ஒருவர் தகவலறியும் உரிமை மூலம் கோரியுள்ளார். இது தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதிதிட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கருத்து வெளியிட்டுள்ளார்.
சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பின்னர் ஹெய்ட்டியிலிருந்து திருப்பி அனுப்பபட்ட 134 இலங்கை படையினருக்கும் என்ன நடந்தது அவர்கள் மீதான விசாரணைகள் எவ்வாறு இடம்பெற்றன என்பது போன்ற விடயங்கள் குறித்து இலங்கை வெளிப்படையாக பதில் அளிக்க வேண்டும் என யஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறுவர்களை பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்த படையினர் குறித்த குற்றவியல் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் வெளிப்படை தன்மை பின்பற்றப்படுகின்றதா என்ற விடயத்தில் இராணுவம் தேசிய பாதுகாப்பு குறித்த வாதங்களின் பின்னால் ஒளிந்துகொள்ள முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
குற்றங்கள் இழைக்கப்பட்டதை விட வெளிப்படைதன்மையினால் நாட்டின் கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என பாதுகாப்பு அமைச்சு வாதிடுவது வேடிக்கையானது என குறிப்பிட்டுள்ள ஜஸ்மின் சூக்கா இரகசியதன்மையே நாட்டின் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.