சுதந்திரபுரம் பகுதியில் இன்றும் அபாயகரமான வெடிபொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில் அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்று மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் ஒருவர் தனது காணிக்குள் இருந்த கிணறு ஒன்று சீரற்று இருந்ததால் அவற்றை அகழ்ந்து சீராக்க முயற்சித்துள்ளார்.
இதன்போது கிணற்றுக்குள் அபயகரமான வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சுதந்திரபுரம் மத்திய பகுதியில் நிலைகொண்டிருந்த கடற்படையினரிடம் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வடக்கு கடற்படை உயர் அதிகாரி விக்ரம்சிங்க (Rear admiral Wikramsingke) தலைமையில் அகழ்வு பணிகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது. குறித்த அகழ்வுப்பணி நீதிமன்றத்தின் அனுமதியுடன் நீதிமன்ற பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் மூன்று நாட்கள் தொடர்ந்திருந்தது.
நேற்று முன்தினம் (18) அந்தப்பகுதிக்கு சென்ற பொலிஸாரும், கடற்படையின் விசேட இராணுவ அணியினரும், அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவாகிய பசீலன் 2000 ஆட்லறி செல் இரண்டு உள்ளிட்ட இராணுவ வெடிபொருட்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் பல அபாயகரமான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.