பிரித்தானியாவில் நச்சுத்தாக்குதலுக்கு ஆளான பெண்: சிகிச்சை பலனின்றி மரணம்!

பிரித்தானியாவில் நோவிசோக் நச்சுத்தாக்குதலுக்கு ஆளான பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். பிரித்தானியாவின் வில்ட்ஷயர் கவுண்டியில் உள்ள சாலிஸ்பரி நகரில், கடந்த வாரம் தம்பதியர் சார்லி ரோவ்லெவும், டான் ஸ்டர்ஜஸூம் அவர்களின் வீட்டில் சுயநினைவு இழந்த நிலையில் கவலைக்கிடமான முறையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்ற நோவிசோக் எனும் நச்சு வேதிப்பொருள் அவர்களின் உடலில் கலந்திருப்பதாக தெரிவித்தனர். அதன் பின்னர், இதுதொடர்பாக வில்ட்ஷயர் பொலிசார் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த தம்பதியரில் டான் ஸ்டர்ஜஸ் மரணமடைந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து டான் ஸ்டர்ஜஸின் குடும்பத்திற்கு, பிரித்தானிய பிரதமர் தெரசா மே ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ரஷ்ய முன்னாள் உளவு அதிகாரி செர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியாவுக்கு இதே ரசாயான விஷம் வைத்து கொல்ல முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.