யாழ். கோட்டையில் இராணுவத்தினர் முகாமிட அனுமதிக்க முடியாது! – முதலமைச்சர் போர்க்கொடி..
யாழ்ப்பாணம் – கோட்டையில் நிரந்தரமாக இராணுவத்தினர் முகாமிட ஒரு போதும் அனுமதிக்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். “ யாழ். ஒல்லாந்தர் கோட்டையை இராணுவத்திற்கு கொடுப்பததென்ற விடயம் சட்டமாக வரவில்லை. ஆனால், பலராலும் பேசப்படுகின்றது. இதனை ஆரம்பித்து வைத்தவர் வடமாகாண ஆளுநர் தான்.
அவ்வாறு இராணுவத்திற்கு ஒல்லாந்தர் கோட்டையைக் கொடுக்க வேண்டுமாயின் யாழ். மாநகர சபையிடம் அனுமதி கோர வேண்டும்.
வடமாகாணத்தில் இருந்து இராணுவம் வெளியேறுவார்கள் எனின், தற்காலிகமாக இராணுவத்தினரை ஒல்லாந்தர் கோட்டையில் வைத்திருக்கலாமே தவிர, நிரந்தரமாக இராணுவத்தினர் முகாமிட அனுமதிக்க முடியாது.
ஒல்லாந்தர் கோட்டை தொல்பொருள் சின்னம் என்பதனால், அங்கு படையினரை முகாமிட அனுமதித்தால், பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என்ற பிரச்சினையும் உள்ளது.
வடமாகாண சபை சுற்றுலா மையம் ஒன்றிணை அமைக்க கோரிய போது, தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். ஆனால், படையினர் வரும்போது, ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதும் புரியவில்லை. சுற்றுலா மையம் அமைக்க கேட்ட போது அனுமதிக்காத தொல்பொருள் திணைக்களம், இராணுவத்தினருக்கு ஒல்லாந்தர் கோட்டையை கொடுப்பது மனவருத்தத்தினை தருகின்றது.
அதேநேரம், இராணுவத்தினர் ஒல்லாந்தர் கோட்டையில் நிரந்தர முகாமிடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.