லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து- பொதுமக்கள் வெளியேற்றம்.

லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அந்த குடியிருப்பில் வசித்த பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
லண்டனின் மேற்கு ஹாம்ப்ஸ்டட் பகுதியில் உள்ள 5 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென பரவத் தொடங்கியது. இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக, சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதேசமயம், குடியிருப்பில் வசித்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் அவசரம் அவசரமாக வெளியேறி உயிர்தப்பினர். தீ சூழ்ந்த அறையில் சிக்கிக்கொண்ட 2 நபர்கள் மட்டும் கிரேன்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். பின்னர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறித்த நேரத்தில் மக்கள் வெளியேற்றப்பட்டதால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதலில் 4-வது தளத்தில் தீப்பிடித்து, மேல் தளத்திற்கும் பரவியிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேல் தளம் சேதமடைந்து, கூரை இடிந்து விழும் ஆபத்து இருப்பதாகவும் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.