News

லிபியா கடற்பகுதியில் அகதிகள் படகு மூழ்கியது: 3 குழந்தைகள் உயிரிழப்பு- 100 பேர் மாயம்!!

லிபியா கடற்பகுதியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த 3 குழந்தைகளின் உடல்கள் கரை ஒதுங்கின. மேலும், 100 பேரைக் காணவில்லை.

திரிபோலியின் காரபவுலியில் இருந்து நேற்று அதிகாலையில் அகதிகளை ஏற்றிக்கொண்டு ஒரு படகு புறப்பட்டுச் சென்றுள்ளது. ஆனால் சில மணி நேரத்தில் நடுக்கடலில் சென்றபோது படகின் என்ஜின் வெடித்து தீப்பிடித்துள்ளது. இதனால் படகில் ஓட்டை விழுந்துள்ளது. அதன் வழியாக தண்ணீர் புகுந்து படகு மூழ்கத் தொடங்கியது. படகில் இருந்த பயணிகள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

படகு மூழ்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த மீனவர்கள் லிபியாவின் கடலோர பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கடலோர பாதுகாப்பு படையின் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

படகில் மொத்தம் 120 அகதிகள் சென்றுள்ளனர். அவர்களில் 16 பேரை மீட்டுள்ளனர். 100 பேர் என்ன ஆனார்கள்? என தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெறுகிறது. இதற்கிடையே நேற்று மாலை 3 குழந்தைகளின் சடலங்கள் கடற்கரையில் ஒதுங்கின.

படகில் பயணம் செய்தவர்கள் மொராககோ, காம்பியா, ஜாம்பியா, சூடானைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அளவுக்கு அதிகமாக அகதிகளை ஏற்றிச் சென்றதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top