விஜயகலாவின் எம்.பி பதவி சபாநாயகரின் கையில்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான இறுதி முடிவு இவ்வார இறுதிக்குள் கிடைக்கும் என சபாநாயகர் அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரின் உறுப்புரிமையை எவராலும் தன்னிச்சையாக அகற்ற முடியாது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு கட்சிக்கும் அந்த உரிமை வழங்கப்படவுமில்லை.
அவ்வாறு உறுப்புரிமை நீக்கப்பட வேண்டுமானால் சட்ட ரீதியாக குறித்த உறுப்பினரின் உறுப்புரிமை நீக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி என்றும் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதில்லை. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையினால் ஒழுக்காற்று குழுவொன்று நியமிக்கப்பட்டு ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒழுக்காற்று குழுவின் முடிவுகள் கிடைத்தவுடன் சபாநாகர், விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்புரிமை குறித்து சரியான தீர்மானித்தை அறிவிப்பார். அத்துடன் இவ்வாரத்துக்குள் அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான தீர்வுகள் கிடைக்கப் பெறும் என்றும் ஐக்கிய தேசியக் தகவல்கள் தெரிவிக்கின்றன.