40 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: அரசு ஆதரவற்றோர் காப்பகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அரசு உதவி பெறும் ஆதரவற்றோர் காப்பகத்தில் தங்கும் 40 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த காப்பகத்தில் சிறுமி ஒருவர் கொல்லப்பட்டதாகவும், அவரை அதே காப்பக வளாகத்தில் புதைத்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் தெரியவர, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஒவ்வொரு சிறுமிகளையும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டுமின்றி அங்குள்ள ஒரு சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காப்பக வளாகத்தை தோண்டும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு கொல்லப்பட்ட சிறுமி வளாகத்திலேயே புதைக்கப்பட்டதாக அந்த வாக்குமூலத்தில் சிறுமி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே பீகார் எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தமது டுவிட்டர் பக்கத்தில், சிந்தித்து பாருங்கள், உங்களது 7 முதல் 17 வயது பருவம் கொண்ட மகளையோ சகோதரியையோ அரசு உதவி பெறும் காப்பகத்தில் சாத்தான்களுக்கு விருந்து வைக்கப்படுகிறார்கள் என்றால் பொறுத்துக் கொள்வீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த ஆதரவற்றோர் காப்பகத்தில் நடந்தேறிய பாலியல் அத்துமீறல் தொடர்பில் கடந்த ஒருமாத காலமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கைதாகியுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.