Edmonton பகுதியில் தீ விபத்தில் குழந்தையைத் தவிர அனைத்தையும் இழந்த கர்ப்பிணிப்பெண்.

கனடாவின் Edmonton பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தனது உடைமைகள் அனைத்தையும் இழந்துள்ளார் ஒரு கர்ப்பிணிப்பெண். Meaghan Ferguson என்னும் அந்தப் பெண் Calgary பகுதியைச் சேர்ந்தவர்.
ஆகஸ்டு மாதம் 6ஆம் திகதி அவருக்கு பிரசவத்திற்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதில் சோகமான விடயம் என்னவென்றால் அவரது கருவிலிருக்கும் குழந்தைக்கு இதயத்தில் குறைபாடு உள்ளது.பிரசவித்த குறுகிய காலகட்டத்திற்குள் அதற்கு ஒரு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்.
இந்த அறுவை சிகிச்சை வசதி மேற்கு கனடா பகுதியில் Edmonton பகுதியில் மட்டுமே உள்ளதால் Meaghan தனது பெற்றோருடன் அங்கு தங்கியிருந்தார். பிரசவத்திற்கு முன்னும் பின்னும் தனக்கும் தன் குழந்தைக்கும் தேவையான அனைத்து பொருட்களையும் அவர் வைத்திருந்த வீடு இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் நேற்றைய தினம் தீ விபத்து ஏற்பட்டது.
யாரோ ஒருவர் கதவைத் தட்டி குடியிருப்பில் தீப்பிடித்து விட்டது, எல்லோரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுங்கள் என்று எச்சரிக்க, தனது மொபைல் போனை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார் Meaghan.விளைவு, தீ விபத்தில் அவரது வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகி விட்டன.
இன்னும் ஒரு வாரத்தில் பிரசவம், அடுத்த சில நாட்களில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை என வரிசையாக பல விடயங்கள் காத்திருக்க, அனைத்தையும் இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நிற்கிறார் Meaghan.