அமெரிக்காவுக்கு தாரை வார்க்கப்படுகிறது திருகோணமலை துறைமுகம்! – திஸ்ஸ விதாரண

திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவிற்கு தாரைவார்த்து கொடுக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன குற்றஞ்சாட்டினார்.
‘அம்பாந்தோட்டை துறைமுகம் , மத்தள விமான நிலையம் உள்ளிட்ட தேசிய வளங்களில் வருமானத்தை விட செலவுகளே அதிகமாக காணப்படுகின்றது என்று அரசாங்கம் குறிப்பிடுவது ஏற்றுக் கொள்ள முடியாது விடயம் அம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருடங்களுக்கு சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இக்காலக்கட்டத்தில் சீனாவே அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தும்.
தற்போது அரசாங்கம் மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்க தீர்மானித்துள்ளது. இலங்கையில் இரண்டாவது சர்வதேச விமானமாக உருவாக்கப்பட்ட மத்தள விமான நிலையத்தின் வருமானங்களை விட செலவுகளே அதிகமாக காணப்படுகின்றது என அரசாங்கம் குறிப்பிடுகின்றமையானது கடந்த அரசாங்கத்தின் மீதான பழி வாங்கும் எண்ணங்களை வெளிப்படுத்துகின்றது.
மஹிந்த காலத்தில் உருவாக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் பலவீனமானது என்று குறிப்பிட முடியாது. மத்தள விமான நிலையத்தை இலாபம் பெறும் நிறுவனமாக மாற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு இதற்காக பிற நாட்டிற்கு எமது நாட்டு வளங்களை வழங்க தீர்மானிப்பது அரசாங்கத்தின் பலவீனமாக முகாமைத்துவ கொள்கையினை வெளிப்படுத்துகின்றது.
அம்பாந்தோட்டை , மத்தள விமான நிலையத்தின் மீதான அரசாங்கத்தின் நோக்கம் முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது திருகோணமலை துறைமுகத்தின் பக்கம் திரும்பியுள்ளது. திருகோணமலை துறைமுகம் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது அல்ல அத்துறைமுகம் ஒரு இயற்கை துறைமுகம் அரசாங்கம் அதனையாவது விட்டு வைக்க வேண்டும். அமெரிக்க இராணுவத்தினரது நடவடிக்கைகளுக்கு திருகோணமலை துறைமுகத்தினை வழங்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்விடயத்தில் அரசாங்கம் கடந்த அரசாங்கத்தை சுட்டிக்காட்டுகின்றது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ அமெரிக்காவுடன் இராணுவ விவகாரம் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றியை செய்துக் கொண்டார் அதாவது அமெரிக்க இராணுவ படையினர் இலங்கையில் இராணுவ முகாம்களை அமைத்து தமது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். குறித்த காலக்கட்டத்தில் இவர்களுக்கு இலங்கை அரசாங்கமே அனைத்து செலவுகளையும் செய்ய வேண்டும் என்று குறித்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகின்றது . இது முற்றிலும் பொய்யான விடயமாகும்.
இலங்கை இராணுவத்தினருக்கு குறித்த காலத்தில் இராணுவ பயிற்சிகளை வழங்க மாத்திரமே ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அரசாங்கம் அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணங்கியுள்ளமை பாரிய எதிர் விளைவுகளை தோற்றுவிப்பதாகவே காணப்படும்.
இந்நியா, சீனா, போன்ற நாடுகளை போன்று அமெரிக்கா மனித நேயம் கொண்ட நாடல்ல. தங்களின் நாட்டின் நலன்களை மாத்திரமே கருத்திற் கொள்ளும் திருகோணமலை துறைமுகம் சர்வதேச கடற்பரப்பில் முக்கிய இடத்தினை வகிக்கின்றது. ஆகவே இத்துறைமுகத்தினை அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு வழங்க அரசாங்கம் முயற்சிக்கின்றமை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தள்ளார்.