அரசியல்வாதிகளின் அச்சுறுத்தலுக்கு வடக்கு அதிகாரிகள் பணியவே கூடாது: விக்னேஸ்வரன் தெரிவிப்பு .

அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு வடக்கு அதிகாரிகள் அடிபணியக்கூடாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கான 110 முகாமைத்துவ உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கைதடியில் உள்ள உள்ளூராட்சி அமைச்சின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசியல்வாதிகள் மற்றும் பிற சக்திகளின் ஊடான அழுத்தங்களின் மூலம் உங்களுக்குப் பாரிய சவால்கள் ஏற்படுத்தப்படக் கூடும். சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்பட வலியுறுத்தப்படக் கூடும். இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது சட்ட ரீதியாகச் செயற்பட வேண்டும். மக்களுக்காக சேவை செய்கின்றோம் என்பதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது. எமது வடக்கு மாகாண சபை மக்களுக்கு எதனை வழங்க எண்ணியிருக்கின்றதோ அதனை நடைமுறைப்படுத்துவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.