ஆவா குழுவை இயக்கும் முக்கிய சக்திகள் தொடர்பில் வெளியான தகவல்.

வடக்கு, கிழக்கில் குறிப்பாக வடக்கில், நிதி நிறுவனங்களிடம் நுண் கடன்களை பெற்றுக்கொள்ளும் பெண்களை அச்சுறுத்தி, வட்டி மற்றும் கடனைகளை பெற்றுக்கொள்ளும் பணிகளில் ஆவா குழுவை ஈடுபடுத்தி வருவது குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தனியார் நிதி நிறுவனங்களே இந்த நுண் கடன்களை வழங்கி வருகின்றன.
குறிப்பாக வடக்கிலும் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் 70 வீதமானவர்கள் இந்த நுண் கடனை பெற்றுள்ளனர். இந்த கடன்களுக்கு 40 வீதத்தில் இருந்து 200 வீதம் வரையில் அநீதியான வட்டி அறவிடப்பட்டுள்ளது.
விசேடமாக வடக்கு, கிழக்கில் வறுமையில் உள்ள மக்களுக்கு அடகு வைக்க காணிகள், சொத்துக்கள் இல்லாத காரணத்தினால், வங்கிகள் மூலம் கடன்களை பெற முடியாதுள்ளது.
நுண் கடன் நிறுவனங்களிடம் இலகுவாக கடனை பெற முடியும் என்பதால், மக்கள் கடன்களை பெற்றுக்கொண்டுள்ளனர். கடனை செலுத்த முடியாத பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.
இதனால், நுண் கடன்களை வழங்கும் நிறுவனங்களை வரையறுக்கவும், வட்டி வீதங்களை நிர்ணயிக்கவும் தீர்மானங்களை எடுத்துள்ளதாக அமைச்சம் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.