இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை- சிஐடி விசாரணை குறித்து மகிந்த கருத்து

குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று மேற்கொண்ட விசாரணையை அரசியல்பழிவாங்கும் நடவடிக்கை என வர்ணித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கீத்நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்தை அரசாங்கம் அரசியல்நோக்கங்களிற்காக பயன்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் சிஐடியினர் தன்னிடம் மூன்று மணிநேரம் விசாரணை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் என்னிடமிருந்து வாக்குமூலத்தை பெறுமாறு சிஐடியினரை தூண்டியிருக்க வேண்டும்,அவர்கள் கீத்நொயர் கடத்தப்பட்ட பின்னர் கருஜெயசூர்ய என்னை தொலைபேவி மூலம் தொடர்புகொண்டாரா அதன் பின்னரே கீத்நொயர் விடுவிக்கப்பட்டாரா என என்னிடம் கேள்வி எழுப்பினர் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனக்கு அது குறித்து எதுவும் நினைவில் இல்லை என்னை பலர் தொலைபேசியில் தொடர்புகொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தனது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக பல விடயங்களை செய்கின்றது,இது அவ்வாறான ஓரு சம்பவம் அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளை இது வெளிப்படுத்துகின்றது,அவர்கள் இவ்வாறான விடயங்கள் தங்களிற்கு நடக்காது என நினைக்கவேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.