News

எதிர்கட்சியாக இருந்து கொண்டு கூட்டமைப்பு சாதித்தது என்ன? – சங்கரி கேள்வி!

நல்லாட்சியில் எதிர்கட்சியாக இருந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு சாதித்தது என்னவென தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேசிய அரசாங்கத்தின் மூலம் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டு இணக்க அரசியல்செய்து கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுக் கொடுத்துள்ளதா? இதுவரை அரசியல் கைதிகள் விடயத்தில் என்ன முன்னேற்றத்தை கண்டார்கள்?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் ஒரு தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றது. அதைப்பற்றி சம்மந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் இருப்பதன் மர்மம் என்ன? போரினால் பாதிக்கப்பட்டவர்களும், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளும் வறுமையில் வாடுகின்றார்கள்.

அவர்களுக்கான திட்டங்கள் எதையாவது வைத்துள்ளார்களா? வெறுமனே தங்களால்தான் இந்த அரசு அமைந்தது என தம்பட்டம் அடித்து கொண்டு, பேரம் பேசி அரசியல் செய்ய தெரியாமல் சோரம் போய்விட்டார்கள் என்று மக்கள் தலையில் அடித்துக் கதறுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் காதுகளில் கேட்கவில்லையா?

தமிழரசுக் கட்சியின் சர்வாதிகார பிடிக்குள் சிக்கிக் கொண்ட பங்காளிக் கட்சிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலையை ஏன் வேடிக்கைப் பார்த்தார்கள்? யுத்தம் பற்றி பேசுவதற்கு இந்திய அரசு அழைத்தபோது எதற்காக தட்டிக் கழித்தார்கள்?

யுத்த நிறுத்தம் ஏற்பட்டால் தங்களின் பதவிக் கனவுகள் தவிடுபொடியாகிவிடும் என்பதால் மக்கள் அழிந்தாலும் சரி விடுதலைப் புலிகள் வீழ்ந்தாலும் சரி வாய்திறக்கக் கூடாது என மௌனவிரதம் இருந்தவர்களிடமே மீண்டும் மக்கள் நம்பிக்கை வைத்ததன் விளைவு, இன்று அவர்களுக்கு சாதகமாகிவிட்டது.

மௌனமாக இருந்தால்தான் மக்கள் மீண்டும் தமக்கு வாக்களிப்பர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்து விட்டது. எனவேதான் மௌனமாக இருந்து சொகுசு வாழ்க்கை வாழ்கின்றார்கள்.

இனியும் மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தும் காலம் வந்து விட்டது சகலரும் ஒன்றிணைந்து சர்வாதிகார தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டிய தருணம் வந்து விட்டது. இல்லாவிட்டால் தமிழ் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இருப்பதையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்” என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top