தேவை ஏற்படுமெனில் விக்கியைச் சந்திப்பேன்! – சம்பந்தன்.

“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்திக்கவேண்டிய தேவை ஏற்பட்டால் சந்திக்கலாம். அப்படிச் சந்திப்பு நடைபெற்றால் அது தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளலாம்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இரா.சம்பந்தனைச் சந்திப்பதற்கு தனது அலுவலகப் பணியாளர் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார். இதனடிப்படையில் சந்திப்பு எப்போது என்று கேட்டபோதே சம்பந்தன் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கக் கூடாது என்று எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதன் பின்னர் சந்திப்புக்கான கோரிக்கையையும் முன்வைத்திருந்தார். கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லை. இதனால் அவருக்குப் பதில் அனுப்ப முடியாமல் போய்விட்டது. வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் சந்திக்கவேண்டிய தேவை ஏற்பட்டால் சந்திக்கலாம். அப்படிச் சந்திப்பு நடைபெற்றால் அது தொடர்பான செய்திகளை நீங்கள் அறிந்து கொள்ளலாம்” – என்றார்.