டென்மார்க்கின் Faroe தீவில் நூற்றுக் கணக்கான திமிங்கலங்களை கொன்ற புகைப்படங்களும் வீடியோவும் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. Faroe தீவில் இச்சம்பவத்தை whale driving என பெயரிட்டு அழைக்கின்றனர். 5 வயது முதல் அங்குள்ள முதியவர்கள் வரை திமிங்கலங்களை கொல்லும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். ஆண்டு தோறும் வெயில் காலத்தின் முடிவில் இதை வாடிக்கையாக இங்குள்ள மக்கள் செய்து வருகின்றனர்.
எதிர்வரும் குளிர் காலத்திற்கான உணவை சேகரிக்கும் நோக்கிலே Faroe தீவு மக்கள் திமிங்கல வேட்டையில் இறங்குகின்றனர். முதலில் தீவு மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் படகுகளில் கடலுக்குள் சென்று திமிங்கலங்களை கரைக்கு ஓட்டி வருகின்றனர். கடற்கரையில் ஒதுங்கும் திமிங்கலங்களை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கூரான கத்தியால் வெட்டிக் கொல்கின்றனர்.
16-ஆம் நூற்றாண்டு முதல் இந்த நிகழ்வானது இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. உலகமெங்கும் இந்த நிகழ்விற்கு விலங்குகள் ஆர்வலர்களால் எதிர்ப்பு எழுந்தாலும் இங்குள்ள மக்கள் வாடிக்கையாக ஆண்டு தோறும் நடத்தியே வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் சுமார் 180 திமிங்கலங்களை Faroe தீவு மக்கள் கொன்று குவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. விவசாயம் போன்று தான் இதையும் தாங்கள் செய்து வருவதாக கூறும் இப்பகுதி மக்கள், குளிர் காலத்தில் தங்களுக்கான உணவே இது எனவும் தெரிவிக்கின்றனர்.
மட்டுமின்றி தங்கள் உணவுக்கு வேறு நாடுகளை நாடும் நிலை வேண்டாம் என்பதாலையே காலம் காலமாக திமிங்கல வேட்டையில் இப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒரு தீவு மக்களே ஒன்றிணைந்து திமிங்கல வேட்டையில் இறங்குவதால் அந்த கடற்பகுதியே ரத்தச்சிவப்பாக காட்சி தருகிறது.