மெக்சிகோவில் பிணக்குவியல் – ஒரே இடத்தில் புதைத்த 166 பிரேதங்கள் கண்டெடுப்பு!

அமெரிக்காவின் அண்டைநாடான மெக்சிகோவில் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட 166 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹெராயின், கஞ்சா, அபின், பிரவுன் ஷுகர் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தியில் உலகின் முக்கிய நாடாக மெக்சிகோ விளங்கி வருகிறது. இங்குள்ள போதைப்பொருள் மாபியாக்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற தாக்குதல்களால் ஒருவரை மற்றவர் பழிதீர்த்து வருகின்றனர்.
இதுதவிர, அபினி செடிகளை வளர்ப்பதிலும், வெளிநாட்டு தரகர்களுக்கு பொருட்களை விற்பனை செய்வதிலும் இங்குள்ள மாபியாக்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், கடத்தல் பேர்வழிகளின் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் சமீபகாலமாக மர்மப் பிணங்கள் வரிசையாக கண்டெடுக்கப்படுகின்றன.
கடந்த 2006ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 2 லட்சம் பேர், போதைப் பொருட்கள் கடத்தல் காரணமாக கொல்லபட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் கடந்த ஆண்டில் மட்டும் 37,000 பேர் மாயமாகியுள்ளதாகவும், 28,702 பேர் கொல்லப்பட்டதாகவும் அந்த புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், மெக்சிகோவின் கிழக்கு பகுதியில் உள்ள வெராகுருஸ் மாநிலத்தில் ஒரே இடத்தில் 32 பள்ளங்களில் புதைக்கப்பட்டிருந்த 166 பிரேதங்கள் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டதாக அம்மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் நேற்று தெரிவித்துள்ளார்.
இதே பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சுமார் 250 மண்டை ஓடுகள் கிடைத்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.