அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, முல்லைத்தீவில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் நடத்தும் கொட்டகைக்கு முன்பாக, இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஒன்று கூடி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘எங்கள் உறவுகளுக்கு நீதி வேண்டும்’ “நல்லாட்சி அரசே சிறையில் இருக்கும் உறவுகளை விடுதலை செய்” ‘எங்கள் அரசியல் கைதிகளுக்கு உடன் நீதி வழங்கு” அரசியல் கைதிகளின் விடுதலையை அரசே விரைவு படுத்து” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான த அமலன், சி. லோகேஸ்வரன், துணுக்காய் பிரதேச சபை தவிசாளர் அ அமிர்தலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


