கனடா-அமெரிக்கா இடையேயான NAFTA ஒப்பந்தத்தில் சீர்திருத்தம்: வெளியான தகவல்

வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக, அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட அமெரிக்க நாடுகளான கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகியவற்றிற்கு இடையே தடையில்லா வர்த்தகம் மூலம் பொருளாதார வளர்ச்சி பெறுவதற்காக, கடந்த 1994ஆம் ஆண்டு NAFTA எனும் ‘வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்’ அமல்படுத்தப்பட்டது.
ஆனால், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர், தற்போதைய சூழலில் NAFTA ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு எந்த நன்மையும் இல்லை என்றும், இது மிக மோசமான ஒப்பந்தங்களில் ஒன்று எனவும் கூறி எதிர்த்தார்.
அத்துடன், தனக்கு திருப்தி அளிக்கு வகையில் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யவிட்டால், அமெரிக்கா இதில் இருந்து விலகும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.
அதன் பின்னர், மூன்று நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கினாலும், அதில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், டிரம்ப் புதிய கெடு ஒன்றை கனடாவிற்கு விதித்தார்.
அதாவது, செப்டம்பர் 30ஆம் திகதிக்குள் கனடா புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும், தவறினால் இந்த ஒப்பந்தம் அமெரிக்கா-கனடா ஆகிய நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு ஒப்பந்தமாக மாற்றப்படும் என்றும், அதன் பின்னர் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை நடத்தியதாகவும், புதிய ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், NAFTA ஒப்பந்தம் தொடர்பாக கனடா-அமெரிக்கா இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இதுதொடர்பான அறிக்கையை இருநாடுகளும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவின் பாதுகாக்கப்பட்ட பால் சந்தையை, அமெரிக்கா அதிக அளவில் அணுகுவதற்கு புதிய ஒப்பந்தம் வழிவகை செய்வதாக கூறப்படுகிறது